முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்



 
 
புத்தம் புதிதாகப்
....பிறக்க வேண்டும்

நித்தம் விடிவானில்
....பறக்க வேண்டும்

செத்த விலங்கோடும்
....அன்பு வேண்டும்

சித்தம் கலையாத
....பண்பு வேண்டும்

புத்தம் மறவாத
....புனிதம் வேண்டும்

ரத்தம் பழகாத
....மனிதம் வேண்டும்

சத்தம் வெல்லாத
....அமைதி வேண்டும்

யுத்தம் இல்லாத
....பூமி வேண்டும்

-எழில் நிலாவிற்காக கவிஞர் புகாரி
 

 


 
வன்முறை மறுப்போம்!
 
வன்முறை நமது வாழ்வை சீரழித்து வருகிறது.
சமூக அசைவியக்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் வன்முறை. மனித வாழ்க்கையின் ஆதாரப் பண்பான மனித நேயத்தைப் படிப்படியாகப் பறித்து - சிதைத்து வன்முறைப் பிரியர்களாக மாற்றி வருகிறது.

சாதி, மதம், மொழி, இனம், பாலினம் என பல்வேறு தளங்களிலும் வன்முறை வன்முறை...
அரசியல் கருத்தியல் பண்பாடு என எங்கும் வியாபித்து வன்முறை மீது காதல் கொண்ட மனிதர்களாக வாழ்ந்து வரக்கூடிய அபாயச் சூழலில் நாம் ஒவ்வொருவரும்...

அனைத்து வகையான எந்த வடிவத்திலும் வெளிப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுவது குரல் கொடுப்பது மனித சமூகத்தின் தார்மீகக் கடமை.

இன்றைய காலத்தேவை வன்முறைக்கு எதிராக மனிதத்துவத்தைத் தூக்கி நிறுத்துவதுதான்.

இந்த உயரிய குறிகோளை முன் நிறுத்தி வன்முறை மறுப்பு ஆண்டில் பயணம் தொடர மனித நேயர்கள் ஒன்று கூடி வருகின்றனர்.
சாத்தியமான அனைத்து வழிகளிலும் வன்முறை மறுப்பு மேற்கொள்ள அனைவரையும் கூவி அழைக்கின்றனர்.

வன்முறை மறுப்போம் அன்புநெறி வளர்ப்போம் !

நாம் அனைத்து வன்முறைகளிலிருந்தும் எம்மை விலக்கிக் கொள்ளவும், அவற்றைத் தடுக்கவும் உறுதி ஏற்போம்.

மனிதர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்துவதும், பிற உயிரினங்களைத் துன்புறுத்துவம் நாகரிகமல்ல என்பதை உணரவேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் அமைதி உலகம் உருவாக உழைப்போம்.

மதங்களின் பெயரால் ரத்தம் சிந்துவதும், உயிரிழப்பு உண்டாக்குவதும் உண்மையான ஆன்மிகமல்ல என்பதை உணர்ந்து அன்புநெறி
வளர்க்க முயற்சிப்போம்.

சாதியின் பெயரால் சக மனிதரைத் துன்புறுத்துவதும் எரிப்பதும், கொல்வதும் மக்களாட்சிப் பண்புக்குத் தலைகுனிவே. மானுடர் அத்தனை பேரும் நிகர் எனும் அன்பு முரசறைவோம்

பெண்கள், குழந்தைகள், பலவீனர்கள் மீதான வக்கிரம், வன்முறை யாவும் மனிதாபிமானமற்றவை. எனவே அவர்களின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுப்போம். தொண்டாற்றுவோம்.

நமது வாழ்வாதாரமான இயற்கையையும், நமக்கு முன் தோன்றிய பல்லுயிரினங்களையும் காப்பது மனித குலத்தின் கடமை. எனவே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் உணர்வை வளர்ப்போம்.