முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்



நளினி மகேந்திரன்
 
இடைவெளி
 

சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்த சண்முகத்தார் சுருட்டொன்றை எடுத்து 
வாயில் வைத்து ஊதியபடியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுருட்டின் 
புகை சுருள் சுருளாகப் போய்க்கொண்டிருந்தது. சிறிது தூரம் போனபின் அவை 
அகன்று பரந்து அப்படியே மறைந்துகொண்டிருந்தது. 
இன்று அவரின் கடைக்குட்டி பூமா வெளிநாட்டிலிருந்து வருகின்றாள். வீடே 
ஒரே அமர்க்களப் பட்டுக்கொண்டிருந்தது. வேலைக்காரர்கள் அங்கும் 
இங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். விஜயாவின் உறவினர் சிலரும் 
வந்திருந்தனர். சண்முகத்தாரையும் ஒரு வேலைக்காரர் குளிக்கவார்த்து உடை 
மாற்றி சாய்மனைக் கதிரையில் விட்டிருந்தார். பூமா வருவதை நினைக்க 
அவருக்கு ஆனந்தமாக இருந்தது. எனினும் தன் விருப்பங்களை அவள் 
பொருட்டு நிறைவேற்ற முடியாதவராக மனதிற்குள் வெதும்பிக் கொண்டிருந்தார். 
அவரும் படுத்த படுக்கையாகி ஒரு வருடம் ஆகிறது. தினமும் சாய்மனைக் 
கதிரையில் இருந்தபடி தன் பழைய நினைவுகளை மீட்பதிலே சுகம் கண்டு 
கொண்டிருந்தார். 

பூமா என் அம்மாவின் சாயல். அம்மாவின் குணங்கள் நிறைய அவளிடம் 
இருந்தன. ஆனால் இப்போ இந்த ஐந்து வருடங்களின் பின் எத்தனை 
மாற்றங்கள் அவளிடம் இருக்குமோ? எனக்குக் கிட்ட வருவாளா? என்னை 
ஆவல் தீர வாயார அப்பா! என்று கூப்பிடுவாளா? அல்லது......அம்மா தான் பெரிது 
என்று விஜயாவின் பின்னாலேயே சுற்றுவாளா? இப்படிப் பல கேள்விகளையும் 
தனக்குள்ளேயே கேட்டுப் பார்த்துக் கொண்டிருந்தவர் அப்படியே பழைய 
நினைவுகளிலே மூழ்கிப் போய்விட்டார். 

அன்று கோவில் திருவிழா. தன் தோழர்களுடன் கோவிலுக்குச் சண்முகத்தாரும் 
போயிருந்தார். வழமை போல சிதறு தேங்காய் எடுக்கும் ஆவலில் ஓடிப்போய் 
சண்டைபிடித்து உருண்டு பிரண்டு கையிலே சிரட்டை குத்தி தேங்காய் எல்லாம் 
இரத்தமாகப் பின் அதைத் தூக்கி எறிந்துவிட்டு தேங்காய் போன கவலையில் 
கையில் காயத்துடன் வீடு வர அப்பா கோபங் கொண்டு அடிக்க வர அம்மா 
தடுத்து என் கைப்புண்ணுக்கு மருந்து போட்டது இன்று போலுள்ளது. அம்மா 
அம்மாதான். இப்படி எத்தனை சம்பவங்கள். அம்மாவின் கருணை உள்ளம் 
யாருக்கிருக்கிருக்கிறது. வேலைக்காரர்களிடம் காட்டும் பரிவு அவவின் இந்தத் 
தாராளமான குணத்தினால் தான் எங்களுக்கும் இவ்வளவு பணம் பெருகியதோ 
என்று நான் பல தடவைகள் நினைப்பதுண்டு. நல்லவர்களை ஏனோ ஆண்டவன் 
நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதில்லை. ஓரு நாள் படுத்தவ விடிய 
எழும்பவேயில்லை. அப்பாவும் நீண்ட நாட்களுக்கு இருக்காமல் அம்மாவிடமே 
போய்விட்டார். நான் தனி மரமானேன். எனக்கு நிறைய உறவினர் இருந்தனர். 
அனைவருமே எங்கள் சொத்தின் மீதே குறியாக இருந்தனர். தங்கள் 
பிள்ளைகளில் ஒருத்தியை எனக்குக் கட்டி வைக்கப் போட்டி போட்டுக் கெண்டு 
நின்றனர். என் பெரிய மாமாவில் என் அம்மாவுக்கும் அன்பிருந்தது எனக்கும் 
தெரியும். இருந்தாலும் அவரின் மகளைத் திருமணம் செய்ய என் மனம் ஏற்றுக் 
கொள்ளவில்லை. காரணம் அவளின் அடங்காத் தனம் எதிர்த்துக் கதைப்பது 
போன்றவை. திருமணமானபின் யாவுமே மாறிவிடும் உன் அம்மாவின் கனவும் 
உனக்கு விஜயாவைத் திருமணஞ் செய்து வைப்பதே என்று மாமாவும் 
விடாக்கண்டனாகத் தொடர்ந்தார். நாளாக நாளாக தனிமை என்னை வாட்டியது. 
வேலைக்காரரின் கைகளினால் சாப்பாடு. எல்லா வகையான பொறுப்புக்களையும் 
தனி ஒருவனாக நின்று சமாளிக்க முடியாமல் திண்டாடினேன். அதன் விளைவு 
விஜயாவை மனைவியாக ஏற்கத் தீர்மானித்தேன். 

விஜயாவிற்கு என் குடும்பம் பற்றியோ என் அம்மா பற்றியோ அம்மாவின் அன்பு 
பாசம் பற்றியோ எதுவுமே கூறவேண்டிய அவசியம் இருக்கவில்லை. யாவுமே 
அவளிற்குத் தெரிந்திருந்தது. ஆரம்பத்திலே என் பணிவிடைகள் யாவற்றையும் 
என் அம்மாவிலும் மேலாகக் கவனித்தாள். என் மீது பாச மழை பொழிந்தாள் 
எங்கே அவளின் ராங்கித் தனங்கள் ஓடி மறைந்தன. இது தான் பெண்மையா? 
திருமண பந்தத்தில் நுழைந்ததுமே பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்களா? சீ 
நான் எவ்வளவு தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். நல்ல காலம் நான் 
சம்மதித்தது. இல்லையேல் நான் இவளை அநியாயமாய் இழந்திருப்பேன். இப்படி 
எத்தனை நாட்கள் நினைத்ததுண்டு. ஆனால்....ஆனால் அவை யாவுமே போலி 
வேக்ஷம் என அறிய நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. வீட்டுப் பொறுப்புக்கள் 
வேறு சில பொறுப்புக்களை அவளிடம் ஒப்படைத்தேன். நாளாக நாளாக அவள் 
போக்கிலே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மெல்ல மெல்லத் தன் 
சுயரூபத்தைக் காட்ட முற்பட்டாள். வேலைக்காரரிடம் நடந்து கொள்ளும் விதம் 
அதிகாரத் தோரணையில் கட்டளையிடுதல் இவை யாவுமே என்னை வேதனை 
கொள்ள வைத்தன. என் அம்மா எங்கே இவள் எங்கே? சீ.....இவளும் ஒரு 
பெண்ணா? நினைக்கவே வேதனையாக உள்ளது. அம்மா ஒரு நாள் பார்த்து 
அப்பாவிடம் எதிர்த்துக் கதைத்ததில்லை. எங்களிடம் தாராளமாகப் பணம் 
இருக்கின்றது. எங்களுக்காக நாயாக உழைக்கும் இவர்களுக்குக் 
கொடுப்பதால்த்தான் எங்கள் குடி மூழ்கிவிடப் போகிறதா என்ன? 
வாக்குவாதங்கள் கூடிக் கூடி நாளாக நாளாக எங்கள் இருவரிடையேயும் 
இடைவெளி கூடிக் கொண்டே போயிற்று.. 

பிள்ளைகளும் வளர்ந்து தங்கள் பாடுகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். 
என்னை யார் மதிக்கிறார்கள். என்னைப் பற்றி நன்கு அறிந்த என் 
வேலைக்காரர் மட்டுமே எனக்குத் துணை இப்போ. அவர்களும் தங்கள் 
சம்பளத்திற்காக வேலை செய்கிறார்கள். தீபாவளி வருடப்பிறப்பு என்றால் அம்மா 
எவ்வளவு அள்ளி அள்ளி வேலைக்காரர்களுக்குக் கொடுப்பா. விஜயா அதற்கு 
எதிர்மாறாக இருக்கிறாள். என்ன செய்வது யாவுமே என் தலைவிதி. 

நேரம் போவதே தெரியாமல் சிந்தனையிலே மூழ்கிவிட்டார். இப்போ அவரின் 
எண்ணம் முழுமையாக பூமா என்னும் பூந்தளிர் போன்ற தன் கண்மணியையே 
சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. பூமா நீயும் உன் சகோரங்களைப் போலவே 
என்னை மதிக்காமல் விட்டு விடுவாயா? எனக்கு ஆறுதல் தர யாருமேயில்லையே. 
வெளிநாட்டு வாழ்க்கை உன்னை நிச்சயம் மாற்றியிருக்காது. நீ என் அம்மாவின் 
சாயல். என் செய்வேன்? என்று கண்களை இறுக மூடிக்கொண்டார். அவரின் 
கண்களில் இருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து 
ஓடிக்கொண்டிருந்தது. 

வீட்டிற்கு வந்த பூமாவைக் கண்ட அவள் அம்மா விஜயாவிற்கோ ஆச்சரியம் 
தாழவில்லை. தன் மகளைப் பார்த்து முகஞ் சுளித்தாள். இது என்ன 
கோலம்?......ஒரு டாக்டர் அதுவும் வெளிநாட்டிலிருந்து வருபவள் இப்படியா 
உடை போடுவது. ஆறு முழத்திலே சேலையைக் கட்டிக்கொண்டு சே.. சே .. 
என்று முணுமுணுத்தபடியே இருந்தாள். எரிகின்ற நெருப்பிலே எண்ணெய் 
வார்ப்பது போல விஜயாவின் உறவினர்களின் கிண்டல் பேச்சுக்கள் வேறு 
விஜயாவிற்கு எரிச்சலை மூட்டின. துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் எடுத்த விஜயா 
வேதனையின் விளிம்பில் நின்று தத்தளித்தாள். 

பூமா வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். வேலையாட்களைச் சுகம் விசாரித்தாள். 
அவள் யாரை இவ்வளவு ஆவலாகத் தேடுகின்றாள் என்று அவள் மனம் மட்டுமே 
அறியும் ஓ! அதோ அதோ அப்பா அப்பாதான். அவளையும் மீறி அவள் கால்கள் 
விரைந்தன. அருகே சென்று தன் அப்பாவை உற்று நோக்கினாள் அவர் 
கண்களிலேயிருந்து வடிந்த கண்ணீரின் கோடுகள் இன்னும் ஈரமாகவேயிருந்தன. 
அவளது கண்களும் கலங்கின. மெல்லமாக தன் அப்பாவின் தலையை வருடின 
அந்தக் கைகள். அந்த அன்பான ஆதரவான ஸ்பரிசம் அவர் உயிரைத் தொடுவது 
போன்ற பிரமை மேலிட மெல்லக் கண்களைத் திறந்தார் அப்பா நான் உங்கள் 
பூமா பூமா வந்திருக்கிறேன் என்று நா தளுதளுக்கக் கூறினாள். சண்முகத்தார் 
தன் மகளை ஏற இறங்கப் பார்த்தார். தன் அம்மாவின் அதே உருவம் அதே கதை 
அதே கருணை அவரிற்கு வார்த்தைகள் வர மறுத்தன. அவர் கண்களில் இருந்து 
தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. தன் மகளை வைத்த கண் வாங்காமல் 
பார்த்துக் கொண்டேயிருந்தார். தன் அப்பாவின் கண்ணீரைத் தன் 
கரங்களினாலே மெல்லத் துடைத்தாள். நடுங்கும் கரங்களினால் அவள் 
கரங்களைப் பற்றித் தன் கண்களிலே ஒற்றிக்கொண்டார். உள்ளேயிருந்து 
விஜயா அழைப்பது கேட்டது. தன் அப்பாவிற்கு நிச்சயமாய் தன் உதவி தேவை 
என்பதை மட்டும் உணர்ந்துகொண்டாள். 

அங்கு வந்ததில் இருந்து தன் தந்தையாருடனேயே அதிக நேரத்தை செலவு 
செய்தாள். அவர் எதிர்பார்த்த அந்த அன்பு அவள் மகள் உருவத்திலே 
வந்துநின்றது. சண்முகத்தாரும் நாளுக்கு நாள் தேற ஆரம்பித்தார். பூமாவின் 
அன்பு மழையிலே நனைந்து திழைத்திருந்தார். எழுந்து நடமாடக் கூட 
ஆரம்பித்துவிட்டார். பூமா மாலை நேரங்களிலே தன் தந்தையாருடன் வெளியே 
சிறிது உலாவி வருவாள். 

விஜயாவிற்கோ தன் மகளின் போக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 
அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவள் மனம் வேதனைப் பட்டது. ஒரு 
நாள் தன் வேதனைகளைக் கொட்டித் தீர்த்தாள். அதற்கு பூமாவோ அம்மா 
எனக்கு உங்களில் நிறையவே அன்பிருக்கு ஆனால்...... ஆனால் அப்பாவின் 
நிலைமையில் அவருக்கு என் அன்பு நிறையத் தேவைப் படுகிறது. நான் 
அவரைக் கவனிக்க வேண்டும் அது என் கடமை. பெற்றவர்களுக்கு நிச்சயமாக 
நாம் கடமை செய்ய வேண்டும். அவரிற்கு உடல் வியாதியைவிட மனோரீதியாக 
நிறையவே பாதிக்கப் பட்டிருக்கிறார். எனவே அவரை அன்பால்த் தான் 
குணப்படுத்த முடியும் என நினைக்கின்றேன். நான் எனது தந்தை இந்த 
நிலைமையில் இருக்கும் போது அவரிற்கு உதவாமல் ஆயிரமாயிரம் 
உயிர்களைக் காப்பாற்றி என்ன புண்ணியம். இந்தப் பணம் பட்டம் பதவி 
எதுவுமே நிலையில்லாதவை. இவை யாவும் எனக்கு எப்படிக் கிடைத்தது? 
கேவலம் ஒரு வேலைக்காரன் தான் என் அப்பாவைப் பராமரிக்க வேண்டுமா? 
மனைவி என்று நீங்கள் அவருக்கு என்ன செய்தீர்கள்? என்று சிந்தித்துப் 
பாருங்கள். இந்த சுக போகங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன. கல்லானாலும் 
கணவன் புல்லானாலும் புருக்ஷன் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரக்காய் தானா? 
ஏன் என் சகோதரர்களாவது இதை உணரவில்லையே. என்னால் 
உங்களையெல்லாம் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. எப்படி அப்பாவை 
இந்த நிலைமையில் விட்டுவிட்டு சந்தோக்ஷமாக உங்களால் இருக்க 
முடிகின்றது? எது வாழ்க்கை? அம்மா உங்கள் அன்பை அனைவரின் மேலும்
அள்ளி வீசுங்கள். அப்போ கிடைக்கிறதே அந்த இன்பத்தை அநுபவித்துப்
பாருங்கள். வருத்தத்திலே வேதனைப் பட்டுக்கொண்டிருக்கும் அவரிற்கு
உங்கள் கையால் பச்சைத் தண்ணீர் சிறிதளவு கொடுத்தால் கூட அது
ஆறுதலாகத் தான் இருக்கும். 

என்னைப் பொறுத்தவரை மனைவியே ஒருவனுக்கு நெருங்கிய உறவாக
விளங்குகின்றாள் அன்பின் உறைவிடமாகவும் அமைகின்றாள். கணவனுடைய
நலத்தில் அதிக கவனம் செலுத்துபவள் மனைவியே. மனைவி என்ற ஸ்தானத்தில்
இருந்து நீங்கள் உங்கள் கடமைகளைத் தவறவிட்டு விட்டீர்கள் என்றே
நினைக்கின்றேன் ஆனால் நான் மகள் என்ற ஸ்தானத்திலிருந்து அவரிற்கு
கடமை செய்ய விரும்புகின்றேன். விருப்பமென்றால் நான் சொன்னவற்றை
மீண்டும் ஒருமுறை நன்கு சிந்தித்துவிட்டு என்னுடன் அப்பாவிற்கு உதவ
வாருங்கள். இல்லையேல் உங்கள் பாதையிலேயே போங்கள்.
உணர்ச்சிவசப்பட்டவளாகப் படபடவென்று பொழிந்து தள்ளினாள். பின்
மெதுவாகக் குரலைத் தாழ்த்தி மிகவும் குழைவாக அம்மா நான் உங்களில்
அன்பில்லை என்றுமட்டும் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டாம் என்றுவிட்டு 
கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்தவள் ஒ. ஓ அப்பாவின் மருந்து நேரம்
என்றுவிட்டு ஒரே ஓட்டமாக அறைக்குள் ஓடினாள் பூமா. தன் மகளின்
கதைகளைக் கேட்டு சிலையாக அமர்ந்திருந்தாள் விஜயா. அவளது மனச்சாட்சி
அவளிற்குச் சாட்டை அடி போட்டுக் கொண்டிருந்தது. சண்முகத்தாரோ தன்
மனதிலே இருந்த அந்த இடைவெளியைப் பூமா என்ற அன்புருவத்தின்
ஆக்கிரமப்பால் நிரப்பிக்கொண்டிருந்தார்.

முற்றும்.